Tuesday, August 30, 2005

ஆயுதப்புரட்சி திட்டம்

("ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்" - தொடர் 17)

ஹெட்கேவர், தனது திட்டம் பற்றி, இவரின் ஞானகுரு திலகரிடம் எடுத்துச் சொன்னபோது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்ற புறக்கணித்துத் தள்ளிவிட்டார். இதற்கு எந்த முக்கியத்துவமும் திலகர் கொடுக்கவில்லை. திலகர் ஆதரவு இல்லை என்றவுடன், ஹெட்கேவரின் வீரமும், குறைந்தது (இந்தக்குருத்துக்களை 'பிஷிகார்' தமது 'சங்நிர்மதா' நூல்-பக்13ல் விளக்குகிறார்)

"நாக்பூருக்கு திரும்பிய ஹெட்கேவர், இந்து மகாசபையில் தான் சேர்ந்து விட்டதாகவும், அந்த அமைப்புக்கு தேவையான நூல்கள், வெளியீடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரே தனது நண்பர்களிடம் கூறுகிறார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றத்துக்கான எண்ண ஓட்டங்கள் இந்தக் காலத்தில் தான் அவருக்கு உருவானது.

"அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபையிலும் ஒரே நேரத்தில், வேலை செய்கிறார்! ராஷ்டிரிய உத்சவ மண்டல் என்ற அமைப்பிலும் தீவிரமாகப் பங்கெடுத்தார்.

அக்ஹதா என்ற மாணவர் அமைப்பிலும், பொதுக் கூட்டங்கள் மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கெண்டார்." என்ற தகவலை பிஷிகார் தமது நூலில் குறிப்பிடுகிறார்!

இவர் அப்போது தீவிரமாகப் பங்கெடுத்த 'ராஷ்டிரிய உத்சவ மண்டல்" என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பாகும். இந்த வகுப்பு வெறி கும்பல் மகாராஷ்டிர மாநிலத்தில் பிவாண்டி என்ற இடத்தில் மிகப்பெரிய வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தியதற்காக, மேடன் விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கும்பலாகும்!

ஒரே நேரத்தில் இந்து மகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து இரட்டை உறுப்பினராக பணியாற்றும் முறை அப்போது இருந்திருக்கிறது! பின்னர் அது ஒரு பிரச்சனையாக வெடித்துக் கிளம்பியபோது தான் 1934ம் ஆண்டு அதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி 'இரட்டை உறுப்பினர் முறையை தடைசெய்து தீர்மானம் நிறைவேற்றியது.

மூத்த தலைவர்கள் பலருடன் ஹெட்கேவலர் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவர் கூட இவரின் ஆயுதம் தாங்கியப் போராட்டத் திட்டத்துக்கு ஆதரவு தரத்தயாராக இல்லை. -என்று எழுதுகிறார் பிஷிகார் தனது நூலில்(பக்-27)

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Thursday, August 25, 2005

பாசிசத்தின் மீது நம்பிக்கை

("ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்" - தொடர் 16)

முதலாம் உலக மகாயுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டுப் பார்ப்பனர்கள்! காரணம் ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்து விடும் என்று நம்பி, அந்த ஆட்சியிலே தாங்கள் செல்வாக்குப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!

ஜெர்மன்-பாசிச இயக்கத்தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ்.கூட்டம்! "இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர் தான் குரு, காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்துவந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக வெறுத்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம் சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள். காந்தியாரை ஒரு தலைவராகவே ஏற்றுக் கொள்ளவில்லை.

1965ம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்."

நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது - மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயி அவர்கள் 'சண்டே' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைத்தான்,(10-6-1979 'சண்டே' இதழ்) இந்த பின்னணியில், முதலாவது உலகப் போரைப் பயன்படுத்தி உள்நாட்டில் ஆயுதப்புரட்சி நடத்திட இவர் போட்ட திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"