Friday, January 07, 2005

காந்தியாரைக் கொலை செய்த இந்து மகாசபை

(தொடர் - 10)

1925ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி! அது ஒரு 'விஜயதசமி' நாள்! அன்றுதான் 'ராஷ்டிரிய சுயம் சேவக் சங்' என்ற நஞ்சு பிறப்பெடுத்தது!

(Hinduism is our Nationalism) 'இந்துயிசமே எங்கள் தேசியம்' என்ற பிரகடனத்தோடு உருவானது அந்த அமைப்பு!

வகுப்புவாதப் பிரச்சினைக்கு காந்தியார் காட்டிய 'சமரசப் பாதை'யைப் பின்பற்றுவது தான் சரியான வழி என்ற எண்ண ஓட்டம் அன்றைய சூழ்நிலையில் மக்களிடையே நிலவியது! இந்து - முஸ்லீம்களிடையே குறைந்த பட்ச ஒற்றுமையை உருவாக்கி அகிம்சை முறை ஒத்துழையாமை இயக்கங்கள் மூலம் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் காந்திய முறைக்கு மக்களிடையே செல்வாக்குப் பெருகியது.

ஆனால், இந்துக்களே போராடி இந்த நாட்டை இந்துக்களின் நாடாக்க வேண்டும் என்று துடித்த பார்ப்பனர்கள், காந்தியாரின் இந்தவழி, தங்கள் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்று அஞ்சினார்கள். வெள்ளைக்காரர்கள் எதிர்ப்பு என்பதைவிட முஸ்லீம்கள் எதிர்ப்பு என்பதிலேதான் அவர்களுக்கு ஆர்வமும் கவனமும் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பை வருவாக்க வேண்டிய அவசியத்தை - அதன் முதல் தலைவரான 'ஹெட்கேவர்' இவ்வாறு கூறுகிறார்.

"காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவால் நாட்டின் எழுச்சி குறைந்து வருகிறது. அதன் காரணமாக தீய சக்திகள் கொடூரமாக தலைவிரித்தாடுகின்றன. தேசியப் போராட்டம் உச்சக்கட்டத்துக்கு வர வேண்டிய நேரத்தில், ஒருவருக்கொருவரிடையே பொறாமை உணர்ச்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா துறைகளிலும் தனிப்பட்ட தகராறுகளே இருக்கின்றன. பல்வேறு சங்கங்களிடையே மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போராட்டம் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது. பாவான் விஷநாகங்கள்(முஸ்லீம்களை இப்படிக் குறிப்பிடுகிறார்), ஒத்துழையாமை இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாடெங்கும் கலவரங்களைத் துவக்கி விஷயத்தைக் கக்கிப்படமெடுத்தாடி வருகின்றன." (ஆதாரம்: சி.பி.பிஷிகார் எழுதிய 'கேஷவ் சங்க் நிர்மதா' இந்தி நூல்-)

-ஹெட்கேவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் காந்தியாரை எதிர்க்கவும், முஸ்லீம்களை எதிர்க்கவும் பார்ப்பனர்களைப் பாதுகாக்கவுமே ஆர்.எஸ்.எஸ்.துவக்கப்பட்டது என்ற உண்மையை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

(1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து வகுப்புவாரி உரிமை கேட்டு தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்துகிறார். 1925ம் ஆண்டில் நாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டம் நடப்பதாக ஹெட்கேவர் கூறுவதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்)

அது மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்.அதிகாரபூர்வமாகவே, முஸ்லீம்களுக்கு எதிரானயுத்தத்தைப் பிரகடனப்படுத்துகிறது.

"நாட்டில் முஸ்லீம்கள் கலவரம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு கலவரத்தையும் முஸ்லீம்களே துவக்கி நடத்துகிறார்கள். அவர்களே குற்றவாளிகள்". -என்று கோல்வாக்கர்(இவர் ஹெட்கேவரின் வாரிசாக ஆர்.எஸ்.எஸ்.தலைவரானவர்) The Man and his mission நூலில் (பக்.24-25ல்) குறிப்பிடுகிறார். கலவரத்தை அவர் இந்து முஸ்லீம் கலவரம் என்று குறிப்பிடவில்லை. முஸ்லீம்கள் கலவரம் என்றே குறிப்பிடுகிறார்!

கோல்வாக்கர் பிரகடனம் இதோடு நின்றுவிடவில்லை. ஒளிவு மறைவு இல்லாமல் திட்டவட்டமாகவே அவர் கீழ்க்கண்டவாறு அறிவித்தனர்.

"பாரத தேசம் என்பது இந்துக்களின் தேசம். ராஷ்டிரம் என்பது இந்துக்களின் ராஷ்டிரமே. இந்த அரசியல் உண்மையை உணராமல் பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாடிப்புகளின் கற்பனையில் சிக்குவதற்கு டாக்டர் ஹெட்கேவர் தயாராக இல்லை. இது தான் உண்மை. உண்மையை வெளிப்படையாக சொல்கிறோம். இந்துக்கள் மட்டுமே இந்துஸ்தானை விடுவிக்க முடியும். இந்துக்களின் சக்தி மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்த உண்மையிலிருந்த - யாரையும் திசை திருப்பிவிட முடியாது. எனவே இந்து இளைஞர்கள் ஒன்று திரட்டப்படவேண்டும். வேறு வழியில்லை. ஆர்.எஸ்.எஸ்.துவக்கப்பட்டது இதற்குத்தான். அந்தப் புனித நாள் தான் 1925-விஜயதசமி நாள்." (குரு கோல்வாக்கர், மேற்குறிப்பிட்ட அதே நூலில் பக்கம் 25)

எனவே, முஸ்லீம்களுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டு அதையே, நோக்கமாகக் கொண்டு உருவானதுதான் ஆர்.எஸ்.எஸ்.என்பதற்கு அவர்களின் வாக்கு மூலங்களே சான்றுகளாகும்.

'நாங்கள் முஸ்லீம்களுக்கு விரோதிகள் அல்ல' என்று இவர்கள் நடத்தும் பிரச்சாரம், உண்மைக்கே தொடர்புடையது அல்ல.

25-9-1925ல் நாக்பூரில் ஹெட்கேவர் இல்லத்தில் 5-முக்கிய புள்ளிகள் கூடி ஆலோசனை செய்து திட்டம் ஒன்றை வகுத்தார்கள்.

இந்த "5 நபர்கள்" யார் யார் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

இந்த 5 நபர்களின் பெயர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெளியிடுவதே இல்லை. ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வெளியீடுகள் எல்லாவற்றிலும் "அய்வர் குழு" என்று தான் குறிப்பிடுகிறார்களே தவிர, இதுவரை அந்த 'அய்வர்' யார்? என்பதை அவர்கள் வெளியிட்டதே இல்லை.

அந்த அய்வர் யார்?
1) டாக்டர் பி.எஸ்.மூஞ்சி
2) டாக்டர் எல்.வி.பாராஞ்சிபே
3) டாக்டர் கே.பி.ஹெட்கேவர்
4) டாக்டர் தோல்கார்
5) டாக்டர் பாபாராவ் சவர்க்கார்

இதுதான் ஹெட்கேவர் வீட்டில் ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அய்வர் குழு. இந்தப் பெயர்கள் ஆர்.எஸ்.எஸ். வெளியீட்டுகள் அனைத்திலும் மறைக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்ன?

வேறு ஒன்றுமில்லை. இவர்கள் காந்தியாரைக் கொலை செய்த இந்து மகாசபை என்ற அமைப்பின் தலைவர்கள். அனைவருமே மாராட்டிய பார்ப்பனர்கள்.

காந்தியார் கொலைக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று சாதித்துக் கொண்டிருக்கும் கூட்டம் ஆர்.எஸ்.எஸ்.அல்லவா?

ஆர்.எஸ்.எஸ் மூலகர்த்தாக்களே காந்தியாரை கொலை செய்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் என்ற உண்மை வெளியாகி விட்டால், அவர்கள் முகத்திரை கிழிந்துவிடும் அல்லவா? எனவேதான் இந்த இருட்டடிப்பு சூழ்ச்சி.


No comments: