Monday, January 24, 2005

புரட்சி" வாழ்க்கையின்' புரட்டுகள்

(தொடர் 15)

மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து மத வெறியரான அதே மூஞ்சி என்ற பார்ப்பனர்தான் அவருக்கு இப்போது உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்புகொள்ள முடியும் என்று விரும்பினார். மராட்டிய மன்னன் சிவாஜியும், திலகரும் இவரது ஞானத் தந்தைகள்.

1910ம் ஆண்டிலிருந்து 1915ம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற போது, இவர் தங்கிய விடுதிதான் அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங்களாக செயல்பட்டது. பல தீவிரவாத இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர்களும் அங்கு வருவது உண்டு.

இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும். ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வமான, சி.பி.பிஷிகார் என்பவரால் எழுதப்பட்ட நூல்(பக் 13) கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"கல்கத்தாவுக்கு சென்றவுடன் ஹெட்கேவர் அனுசிஹிலன் சமிதி என்ற அமைப்பின் நெருக்கமான உறுப்பினராக சேர்ந்துக் கொள்ளப்பட்டார். ஆபத்துக்கள் நிறைந்த பல முக்கியமான ரகசிய வேலைகள் அவருக்குத் தரப்பட்டன. புரட்சியாளர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களை ரகசியமாக கொண்டு சென்றார்" - என்று கல்கத்தா போன உடனேயே இவர் புரட்சிக்காரராக மாறிவிட்டதுபோல், ஒரு தோற்றத்தைத் தந்து எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால் வேறாக இருக்கிறது!

ஜே.ஏ.குர்ரன்(J.A.Curran) எழுதிய "Militant Hindusiam in Indian Politics" நூலில்(பக்கம்13ல்) உண்மையை உடைத்துக் காட்டுகிறார்!

"கல்கத்தாவுக்கு ஹெட்கேவர் போனவுடன், புரட்சி இயக்கங்கள் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், அவர் சிறைக்குச் சென்றதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிரிட்டிஷார் அவரை போலீஸ் காவலில் வைத்திருந்தாக சொல்கிறார்கள். அதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது."

-என்று ஹெட்கேவரின் "புரட்சி" வாழ்க்கையின்' புரட்டுகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறார்.

ஆபத்து தரக்கூடிய பல ரகசிய வேலைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர எந்த வேலையைச் செய்தார்? எங்கே தூது போனார்? எந்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு போனார் என்பதற்கான விளக்கங்கள் எதையுமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!

கல்கத்தாவிலே சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார் என்று அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் கூச்சப்படவில்லை' ஹெட்கேவர் வாழ்க்கை வரலாறும் ஆர்.எஸ்.எஸ்.வரலாறும் ஒன்றே என்கிறார்கள். இந்த 'சத்தியகீர்த்திகள்'

ஆனால், இந்த 'உத்தம' 'புத்திரர்'களின் கதைகள் பொய்மைகளின் மூட்டைகளாகவே இருக்கின்றன.

கல்கத்தாவில், மருத்துவ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஹெட்கேவர் நாக்பூர் திரும்புகிறார்! அப்போது முதலாம் உலக மகாயுத்தம் துவங்கிவிட்டது. யுத்தத்தில் இங்கிலாந்தும் சம்பந்தப்படுகிறது! அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டிலே ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

No comments: